ஞாயிறு, 13 அக்டோபர், 2013

வீடும்-கூடும்

உற்றார் உறவினர்களுக்கோ
உள்ளுக்குள்
பொறாமை இருந்தாலும்
வெளியில் சொன்னார்கள்
மகிழ்ச்சி அடைவதாய்

கட்டியவளுக்கோ
கடன் பட்ட
கவலை
உள்ளுக்குள் என்றாலும்
ஓர்
ஆனந்தம்
சொந்தமாய் ஆனதென்று

நண்பர்களுக்கோ
என்னடா
எப்போ
இதுக்கொரு
பார்ட்டி
என்பதானது
(ஒரு சிலர் கொடுத்து உதவியிருப்பினும்)

மகள் மட்டும்
அப்பா
பறவைகள் எல்லாம்
எங்கே போயிருக்கும்
பாவம்
சொல்லுப்பா
எங்கே போயருக்கும்

நாம்தான்
இங்கிருந்த
மரத்தை வெட்டிவிட்டு
வீடு கட்டி விட்டோமே
கண் கலங்க
நெஞ்சம் நெகிழ
கைப் பிடித்துக் கேட்கிறாள்
உண்மையாய்.




கருத்துகள் இல்லை: