புதன், 24 டிசம்பர், 2014

சனி, 20 டிசம்பர், 2014

சனி பெயர்ச்சி

ஓரிடமாய் இருக்க முடியாமல்
வீடு வீடாய் நகரும் சனி
உண்மையில் யாருக்கு சனி

வெள்ளி, 19 டிசம்பர், 2014

வருமே கவி

ஒன்று
ஒவ்வொன்றாய் எழுது
ஒன்றிலிருந்து ஒன்று
மற்றொன்றாய் பிரித்தறி
மற்றொன்றை
வேறொன்றாய் மாற்றி அமை
வருமே பார்
ஒன்று பல நூறு ஆயிரம்
கவி உனக்கு

சனி, 13 டிசம்பர், 2014

மழை-4

மழைநீர் சேகரிப்பு
அம்மா செய்தாள் தட்டில்
ஒழுகும் வீட்டில்

மழை-3

பாத்திரம் வைத்து சபிக்கும் அம்மா
கப்பல் விட்டு மகிழும் குழந்தை
ஒழுகும் மழைக் குடிசை

மழை-2

மழையில் நனையும் மரம்
தலை துவட்டி விடுகிறது
காற்று.

மழை

நினைவூட்டிச்செல்கிறது
உனக்கும் எனக்கும்
காதலை பெய்யும் மழை

சனி, 6 டிசம்பர், 2014

பட்டாம்பூச்சி

எல்லாருக்கும் பிடிக்கும்
நம் காதல் - வா
பட்டாம் பூச்சியின் சிறகாவோம்

பட்டாம்பூச்சி

மனம் சோர்ந்தால் பார்
பூக்கள் மட்டுமா முள்ளிலும்
சிறகசைக்கும் பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி

ஏதேதோ எழுதினேன்
பொருந்தி வந்ததென்னவோ
பட்டாம்பூச்சி காதலுக்கு

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சியே சொல்
சிறகசைப்பில் உதிரும்
வண்ணங்களா பூக்கள்

பட்டாம்பூச்சி

ஒவ்வொரு தோல்வியிலும்
சிறகசைத்து பறக்கும்
என் கனவு பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி

வரைந்திட முடியவில்லை
எத்தனை வண்ணங்கள் குழைத்தும்
மனம் கவர் பட்டாம்பூச்சி

வியாழன், 4 டிசம்பர், 2014

பட்டாம்பூச்சி

நல்லா படிக்கிறவங்க
டீச்சர் வீட்டுக்கு வரலாம்
இருந்தும் பட்டாம்பூச்சியின் பின் மனம்

உலகப் பூக்களை
ஒன்றாக விழுங்கினால் வருமா
பட்டாம்பூச்சி கவிதை

சனி, 29 நவம்பர், 2014

நிரூபணம்

நடிகர்கள் தலைமையில் ஆட்சி
நிரூபணம் ஆனது
கண்ணீர் மல்க பதவி ஏற்பு

திங்கள், 24 நவம்பர், 2014

மறுபடி பிறப்பேன்

நீங்கள்தான்
முடிவுசெய்ய வேண்டும்
ஏனெனில்
முடிவுசெய்யுமிடத்தில்
நீங்கள்தான்
இருக்கிறிர்கள்...

நாடு கடத்தலாம்
நாடு கடத்த ஏதுவாக
தேச துரோக
குற்றம் சுமத்தலாம்.

கைது செய்யலாம்
விசாரணை ஏதுமின்றி
கைது செய்ய
குண்டர் சட்டத்தில் கைது
என்றும் கூறலாம்.
வெளியில் வராதபடிக்கும்
உதவியாய் இருக்கலாம் அது.

தூக்கில் போடலாம்
பொது அமைதிக்கு
பங்கம் விளைவித்ததாய்
அறிக்கை விடலாம்

கொஞ்சம் சந்தேகம்
வருமென்றால்
உள்ளிருப்பிலேயே
துப்பாக்கியின்
தோட்டா தீரும்வரை
சுட்டுத்தள்ளலாம்
தப்பிக்க முயற்சித்ததாய்
சமாதானம் செய்யலாம்

எதைச்செய்தாலும்
ஒன்றை
நினைவில் கொள்ளுங்கள்
எம்மக்களுக்கான
வாழ்வும் உரிமையும்
முழுதாய் கிடைக்கும் வரை
மறுபடி மறுபடி
பிறப்பேன் என்று

வெள்ளி, 14 நவம்பர், 2014

கலகக் குரல்

பேசலாம் என்றார்கள்
பேசினேன்
என் மக்களிடம்
அவர்கள்
அறியாதிருப்பதை
அறிந்துகொள்ள வேண்டியதை
நிறுத்து - இது
கலகத்தின் குரல்
என்கிறார்கள்.

எழுதலாம் என்றார்கள்
எழுதினேன்
எங்கள் மக்களின்
அவலங்களை
அவஸ்தைகளை
எழுதுகோலை
பிடிங்கி எறிந்தார்கள்
எழுதாதே - இது
எதிர்முனை செய்தி
என்கிறார்கள்.

பாடலாம் என்றார்கள்
பாடினேன்
எஙகளின்
தேவைகளை
உரிமைகளைக் குறித்து
குரல்வளை நெறிக்கிறார்கள்
என் குரல்
ஒன்று ஒப்பாரியாகவோ
போர் பரணியாகவோ
ஒலிக்கிறதென்கிறார்கள்.

என்னைப் பேசச்சொன்னால்
என்னை எழுதச் சொன்னால்
என்னைப் பாடச்சொன்னால்
வேறென்ன பேச
வேறென்ன எழுத
வேறென்ன பாட

என்மக்கள் இன்னும்
உரிமையற்ற மனிதர்களாய்
வாழும் வரையில்
அதைப் பற்றி
பேசாது எழுதாது பாடாது....
அது வரை
என் குரல்
கலகத்தின் குரல்தான்....

திங்கள், 3 நவம்பர், 2014

ஊழல்

முள்ளை முள்ளால் எடு
வாக்களித்தனர் வாக்காளர்கள்
ஊழலுக்கு எதிராய் வேறொரு ஊழல்

வரிசை

ஒன்று இரண்டு மூன்று
எந்த வரிசையென்றாலும்
கடைசியில் தான் பெண்கள்.

புதன், 29 அக்டோபர், 2014

திரவியம் தேடி

ஒவ்வொன்றும் ஒரு மாதிரி
சக வயது பசங்களோடு
குளம் சென்று குளித்து
மீன் பிடித்து சுட்டது...

வேலி வழி ஓடி
தலையாட்டும் ஓணான்
ஒரு கண் பார்வையில்
குறிபார்த்து கல்லெறிந்தது

நாய்க்கரு மரத்தில்
மாங்காய் அறுத்து
சட்டையின்றி நிக்கவைத்தது...

வகுப்புக்குள் இருந்த
லட்சுமி ஜடையை இழுத்து
நானில்லை அவன் என்று
போக்கு காட்டி ஆடியது...

நாய்குட்டி போட்ட இடத்தில்
கண்திறக்காமல் தாய் தேட
உதவுவதாய் நினைத்து போக
நாய் கடித்து துடிதுடித்தது...

போட்டுவைத்த கோலத்தில்
சைக்கிள் டயர் உருட்டி
அழகு கோலத்தை
அலங்கோலமாக்கியது...

யாரேனும் ஊருக்குள்
புதுசாய் வந்து விட்டால்
அவர்களின் தேவைக்கு உதவி
ஆளாப் பறந்தது...

இன்னும் இன்னும்
மனமுழுக்க எத்தனையோ
ஒவ்வொன்றும் ஒருமாதிரி


நினைக்கத்தான் முடிகிறது
சொல்ல யாருமில்லை
முகம் தெரியா
மொழி தெரியா

திரவியம் தேடி
அலையும் தேசத்தில்


பால்விலை

தண்ணீர் குடித்த மாடுகள்
பன்னீர் குடிக்குமோ
பால் விலை உயர்வு

மொட்டை

அதிசயம் ஆனால் உண்மை
மொட்டை அடித்தனர் அமைச்சர்கள்
மக்களுக்கல்ல தங்களுக்கு

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

நட்பு

தேடி அலையத்தேவையில்லை
அமர்ந்த இடத்தில் கிடைக்கிறது
முகநூலில் நட்பு

யாரைத்தேடி

யாரைத்தேடி போகிறதோ
முதுகில் மூட்டையுடன்
ஊர்ந்து செல்லும் நத்தை

ஏதோ ஒன்று

மறந்திருக்க முடியவில்லை
ஏதோ ஒன்று நினைவூட்டும் காதலை
பெய்த மழை

செவ்வாய், 21 அக்டோபர், 2014

மழை

குளித்த மகிழ்ச்சி
மரம் செடி கொடிகளுக்கு
பெய்த மழையில்

ஏதேதோ பேசுகிறார்கள்
மனத்துள்ளும் வெளியிலும்
பெய்யும் மழை கண்டு

சனி, 4 அக்டோபர், 2014

இருவிரல்

இருவிரல் நீட்டி கேட்டேன்
அம்மாவா அப்பாவா
இருவிரலும் பிடித்தது குழந்தை

குழந்தை

எட்டிப்பார்த்தார் கடவுள்
கருவறையிலிருந்து
கூட்டநெரிசலில் குழந்தை

எழுதா கவிதை

என்னதான் முயற்சித்தாலும்
முடியாமல் தொக்கி நிற்கும்
எழுதாத கவிதை ஒன்று

காளான்

ஏதேனும் ஒன்று
 மழைக்கு ஒதுங்க
இயற்கை விரித்தகுடை காளான்

இதயம்

பொய்யுரைக்கிறேன் இருக்கிறதென்று
கேட்பவர்களிடமெல்லாம்
உம்மிடம் தொலைத்த இதயம்

அன்பு

திசைவெளி எங்கும்
காணக் கிடைக்கிறது
உம்மிடம் தவறவிட்ட அன்பு

திங்கள், 29 செப்டம்பர், 2014

வருவாய்

எது எப்படியோ
கண்ணுக்கு தெரிந்து
130 கோடி இந்தியாவுக்கு வருமானம்

மழைக் காளான்

இயற்கை விரித்த குடை
இளைப்பாறும் எறும்பு
மழைக் காளான்

திங்கள், 22 செப்டம்பர், 2014

ஆவின்

அதிக தைரியம் பிறந்தது
அன்னம் மறைந்ததால்
ஆவின் பாலில் கலப்படம்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

நாகரீகம்

நீ எப்படி வேண்டுமானாலும் இரு
எனக்கொன்றும் இல்லை
நீ உன் நாகரீகம் இழக்காதவரை.

வித்தியாசம்

சுமக்க நாலு பேர்
இருந்தும் வித்தியாசம்
பல்லக்கு - பாடைக்கு

விருப்பம்

நிறைய பளிங்குகற்கள்
இருந்தும் விருப்பமில்லை
உனை இழந்து தாஜ்மஹால் எழுப்ப.

சனி, 20 செப்டம்பர், 2014

மழை-மரம்

ரசித்துக் கொண்டிருந்தேன்
மழையில் நனையும் மரம்
அதனடியில் ஒதுங்கி நின்று.

இசை

நல்ல இசை
தொடர்ந்து தருகிறது
ஓட்டை புல்லாங்குழல்

திங்கள், 8 செப்டம்பர், 2014

அன்னபூரணி

அவள் 
தினம் தினம்
பத்து பதினைந்து பேருக்கு
படியளப்பவள் இல்லை
அன்றாட பிழைப்புக்கே
நீண்ட வரிசையில்
காத்துக்கிடக்கிறாள்...
அமுதம் அங்காடியில்
ஆனாலும் அவள் பெயர்
அன்னபூரணி....

வியாழன், 4 செப்டம்பர், 2014

கரையெண்ணி

உள்ளம் கொள்ளை போகுது

இந்தியாவின் விடாப்பிடியான
கரையெல்லாம்
போக்குதாம் ஏரீல்
கேட்கும் போதெல்லாம்
போக்கவே முடியாமல்
படிந்துகிடக்கும் ஊழல்
கரையெண்ணி...

புதன், 3 செப்டம்பர், 2014

பிள்ளையார்

விற்ற பிள்ளையார்க்கு எல்லாம்கிடைக்க
உண்ணாவிரதம் இருப்பவர் போல் பாவம்
விற்காமல் கிடக்கும்பிள்ளையார்கள்

உலகை காக்கும் பிள்ளையார்
விஸ்வரூப தோற்றம் கொள்ள
அவரைக்காக்க ஐந்தாறு போலீஸ்

சனி, 23 ஆகஸ்ட், 2014

அம்மாவின் கேள்வி

உச்சி முகர்ந்து முத்தமி ட
உண்மையில்  குழந்தைக்கா
எதிர் நிற்கும்  அம்மாவின் கேள்வி 

நி லா -நீ

நி லா நி லா ஓ டி வா
அ ழை த் த து நி லவை யா
உ ன் னை எ ன அ றி வா யா நீ  

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

நீ-நான்


உடுத்திக் கலையும் துகில்
உண்டு மகிழும் உணவு
சூடிகளிக்கும் மலர்
காண விரும்பும் மேனி
எல்லாம் எனக்கு ஆனந்தமாக
நீ
அம்பாலிகையா
அடக் கள்ளியா
நான்
ஆச்சாரியனா
அடியவனா
அன்பே அன்பே சொல்

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

எழுதிய கடிதம்

பொய்யுரை பழகினேன்
எழுதியக் கடிதத்தில்
அனைவரும் நலமென்று

உயிர்வதை

உயிர் வதை வேண்டாம்
உருகி உரைத்தார் முனிவர்
மான் தோலில் அமர்ந்து

சுகம்

உமக்கு என்னை
பழி வாங்குவதாய்
நினைப்பதில்

எமக்கோ
நீ பழிவாங்க
நான் இருக்கிறேன்
என்பதில்...


ஏமாற்றம்

ஏமாற்றம்தான்
என்றாலும்
தினம் தினம்
எதிர்பார்த்துக்கிடக்கிறேன்

என் ஏமாற்றம்
உனக்கு
அளவிலா ஆனந்தம்
தரும் என்பதால்...

கிருமிகள்

கழிவறைக்குள்
கைகளுக்குள்
வீட்டின் தரையில்
பற்களில்
பளபளக்கும் ஆடையில்
எல்லா இடத்திலும்
எல்லாவற்றிலும்
நிறைந்திருக்கும் கிருமிகள்
அடிக்க தெளிக்க பூசிக்கொள்ள
அந்நிய மருந்து
கிருமிகள் எல்லாம்....?

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

குழந்தை முகம்

மொட்டை மாடி நிலா
முகம் மறைத்தது மேகத்துள்
குழந்தை முகம் கண்டு

குழந்தை-ஹைக்கூ

மழை வெறுத்துப்போனது
ரசிக்க யாரும் மில்லை
கணினியில் குழந்தைகள்

தூங்கும் குழந்தை -ஹைக்கூ

நீண்டு செல்லும் பேச்சு
ஆடவந்ததை மறந்து
அமர்ந்தே தூங்கும் குழந்தைகள்

சனி, 26 ஜூலை, 2014

சிக்கல்

சிக்கிக் கொள்கிறது
புள்ளியும் மனமும்
அவள் கோலத்தில்.




புதன், 16 ஜூலை, 2014

பைத்தியம்

காணக்கிடைக்கிறார்கள்
அங்கிங்கெனாதபடி
நீக்கமற நிறைந்து
எங்கும்
விதவிதமாய்
பைத்தியங்கள்.

கடவுள் பைத்தியம்
காதல் பைத்தியம்
கட்சிப் பைத்தியம்
காசுப் பைத்தியம்

காட்சிப் பைத்தியம்
கவிதைப் பைத்தியம்
தன் பைத்தியம் உணரா
அடுத்தவர் பைத்தியம்
கதைக்கும் பைத்தியம்

மண் பைத்தியம்
பெண் பைத்தியம்
காலங்காலமாய்
தொடரும் பைத்தியம்

மனப் பைத்தியம்
மாயப் பைத்தியம்
தீர்க்கும் பைத்தியம்
எங்கு உள்ளார்?
தீரும் பைத்தியம்
எங்கு உள்ளது
பைத்தியங்கள்
தன்னைத்தான்
சுற்றும்
பூமி பைத்தியத்தினுள்
எல்லா
பைத்தியங்களும்.


காதல்

துளையிட்ட
வெற்றுப் புல்லாங்குழல்
மெல்லிய
காற்றாய் உள் நுழைந்தாய்
இசை
மழையாய் காதல்

சனி, 12 ஜூலை, 2014

அடியவனுக்கு

அயர்ந்தால்
ஆனந்த சயனம்
நடந்தால்
அற்புத நடனம்
நின்றால்
அடி முடி காணத் தோற்றம்
பொழிந்தால்
திக்குமுக்காடும் அன்பு
சிரித்தால்
பொல்லாச் சிரிப்பு
அடியார்க்கோ ஆண்டவன்
அடி கள்ளி
அடியவனுக்கோ
நீ.

வெள்ளி, 11 ஜூலை, 2014

உண்மை(யோ) சொல்

அடுக்கலைச் சப்தம்
திண்ணையில் இருந்து
உள் ஓடித் திரும்பினேன்
பூனை ஒன்று
சாளரம் வழி
குதித்தோட  எண்ணினேன்
அட நாமதானே
அனுப்பி வைத்தோம்
அதற்குள் மறந்து...

சிறிது கழித்து
கூடத்தில் நடைபயில
ரெண்டடிச் சென்று
திரும்பி உணர்ந்தேன்
ஊருக்குப் போனதை.

மீண்டும் ஓசை
மீண்டும் எட்டிப்பார்க்க
நானே நடந்தேன்
அவள்போல் அணிந்து
சரிபட்டு வாராது

எத்தனை நாளைக்கு
நான் உங்க கூடவே
அடைபட்டுகிடக்க
ஒரு நாலு நாள்
எங்கேனும் நிம்மதியா
போக விடுவீங்களா
என்றவளை
ஊருக்கு அனுப்பிவிட்டு
அனுப்பிய ஊருக்கு
மனம் புறப்பட்டது

போகும்போது
சொல்லிப் போனாள்
நீங்க இருக்க மாட்டீங்க
பைத்தியம்
உங்களுக்கு என்மேல்
எப்பொழுதும்

அவள் சொன்னது
உண்மை(யோ) சொல்வீர்

ஞாயிறு, 6 ஜூலை, 2014

இல்லாது இரு...

இருக்கும் போது
தெரிவதில்லை எதுவும்
இல்லாத போது
உணர்கிறோம்
இருப்பின் மகத்துவம்

எதிர்படும் நபர்கள்
கேட்கிறார்கள்
காணத நபரின்
நலனும் செயலும்

இல்லாதது குறித்துதான்
இருப்போர் எண்ணம்
இருந்துகொண்டிருக்கும்

இருப்பதாய்
பாவித்து பாவித்து
இருப்பதாய்
இருந்து கொண்டிருப்போம்
இல்லாத போதும்

பார்க்கும் முகங்கள்
கேட்கும் குரல்கள்
செய்யும் வேலை
இப்படியாய்
எல்லாவற்றிலும்
காணக் கிடைக்கிறார்கள்
இல்லாதிருப்பவர்கள்

இருப்பவர்கள்
இல்லாதவர்களாய்
ஆகிப்போதும் உண்டு

இருப்பில்
கிடைக்கும் மகத்துவம்
இல்லாது இருப்பதில்
பெரும் மகத்துவம்...

திங்கள், 30 ஜூன், 2014

என்நிலை

எத்தனை வார்த்தைகளில்
சொன்னாலும்
ஒன்றுதான்
என்நிலை

நீள் நெடு
பயணமாய் தொடரும்
உன் இதயத்தின்
மையம் நோக்கி
என் பாதம்.

ஞாயிறு, 29 ஜூன், 2014

நடுநிசி நாய்கள்

காதல்
நடுநிசி நாய்கள்
யாரை
தூங்க விட்டிருக்கிறது
சொல்லுங்கள்.

@நன்றி தலைப்பு உபயம் சுந்தர ராமசாமி கவிதை நூல்

சனி, 28 ஜூன், 2014

ஏப்ரல் முதல் தேதியிலா சொல்...?

உமக்கு எத்தனையோ
காரணங்கள்
இருக்கும்
மறந்து போவதற்கு.

அலுவலகம் போகும்
புருஷனுக்கு
தயார் செய்து
கையசைத்து
பொய்யாக வேணும்
புன்னகைத்து...

பிள்ளைகள்
எழுப்பி
குளிக்கச் செய்து
தலைவாரி
உடை மாற்றி
பள்ளி வண்டிக்குள்
தள்ளி திரும்ப...

சொந்த பந்தம்
பாத்திரம் பட்ஷணம்
அக்கம் பக்கம்
மேலுக்கேனும்
ஒரு நிமிட
நலம் விசாரிப்பு...

ரேஷன் கடை
மளிகைப் பொருள்
துவைத்து முடிக்க
பூசை புணஷ்காரம்
ஏதேனும் என்றால்
செய்து வைக்க...

பசியை மறந்து
இயங்கிக்கொண்டிருந்தாலும்
இடையில் கொஞ்சம்
அருந்திக் கொள்ள...

மீண்டும்
பிள்ளை புருஷன்
வீட்டின் பெரியவர் என
தொடர்ந்து இயங்க...

எத்தனையோ
இருக்கும்
மறந்து போக...

ஏனோ
கிடந்து தவிக்கும்
மனம்
நாளும்...

சரி சொல்
நீயும் நானும்
காதலிக்கிறோம் என்று சொன்னது
ஒரு
ஏப்ரல் முதல் தேதியிலா...
சொல்.

செவ்வாய், 24 ஜூன், 2014

அறிவாயா என்னை?

நீ அகம் மகிழ்ந்து
சிரிக்கையில்
உன் எண்ணங்களை பிரதிபலித்து
சிரிக்க...

நீ
மனம் வெதும்பி குளுங்கி
அழுகையில்
உனது துயரை
என்னுள் வாங்கி நானும்
அழ...

உனது அசைவுகள்
எல்லாம
எனது அசைவுகளாய்
நொடிக்கு நொடி
காட்டி மயங்க...

உன் உதைப்பை
ஏற்று
மறுபடி உதைக்காது
நொறுங்க

உன்னை
வெறுமைக்கு அப்படியே
பிரதிபலித்து
நொறுங்கிப்போக
கண்ணாடிப் பொருளா...

எமக்கான மனம்
எமக்கான சிந்தனை
எமக்கான செயல்
உமக்கானது போல்
எமக்கென சிலவும்

உண்டென
எப்போது எப்போது
அறிவாய் என்னை
சொல் நீ?

வியாழன், 19 ஜூன், 2014

பெயர் சொல்லி

ஆயிரம் திருநாமம்
உமக்குண்டு என்பார்
ஒரு நாமமும் எளியேன்
நான் அறியேன்
எமை ஏற்று
அருள்வாயா...
என்பார் சிலர்

உன் ஒரு நாமமன்றி
வேறொரு நாமம்
ஒருநாளும் உரையேன்
அடியேன் என்னை
ஏற்றுக்கொள்வாயா
என்பார் சிலர்...

உன் பெயர்
சொல்லிச்சொல்லி
என்பெயர்
மறந்துபோனேன்
உன் உள்ளத்து
உண்டோ எமக்கிடம்
என்பார் சிலர்

உன்பெயர் கொண்டு
என்பெயர் அழித்து
உன் பெயரே
என் பெயராய்
கொண்டுவிட்டேன்
என்பார் சிலர்

இட்டப்பெயர் ஒன்று
இட்டுக்கொண்ட பெயரும் உண்டு
பட்டப் பெயர் ஒன்று
பதவிப் பெயர் ஒன்றென
எத்தனையோ பெயர்
இருந்தும்
இன்னும் பெயர் தேடி
அலைவோர் சிலர்

பேர் போன ஆளாய்
ஆனதன் பின்னால்
பெயரில் என்ன
பெயரின்றி வாழ்தலே
சுகமென சொல்வார் சிலர்

பெயருக்கும் பேருக்கும்
இடைப்பட்ட பெரும் வாழ்வு
வாழ்ந்து முடிக்க
தேவை யென்றாகிறது

பெயரில் என்ன இருக்கு
பெயர்சொல்லி அழைப்பதில்
இருக்கு நெருக்கம்.


செவ்வாய், 17 ஜூன், 2014

எல்லாம் நீ...

பூவின் சிரிப்பில்
இறைவன்
புழுவின் நெளிவில்
இறைவன்
அருவியின் தெரிப்பில்
இறைவன்
ஆகாய விரிப்பில்
இறைவன்
எல்லாம் எல்லாம்
இறைவன்
ஆசரம வாசிக்கு

உன்னைக் கண்ட
நாள் முதலாய்
அடியவனுக்கோ
உள்ளம் சொல்லும்
எல்லாம்
நீ
நீ
நீ என்று.

ஞாயிறு, 8 ஜூன், 2014

தலைமுறை -ஹைக்கூ

படரும் நிழல்
தொடர் பங்காளி பகை
உறவுக்கு முயலும் மரம்.

தண்ணீர் பஞ்சம்
காண்பது அரிது
அடுத்த தலைமுறை விவசாயி

உணர்த்திச் செல்கிறது
மௌனம்
வார்த்தைகளில்பிடிபடா அர்த்தம்.

உள்ளிருக்கும் பகை
உறவாடி மகிழ்கிறார்கள்
பேருக்கு வெளியில்.

திங்கள், 2 ஜூன், 2014

பீர்-பா...சென்ரியூ

அளக்க உதவுகிறது
பீர் விற்பனை
வெயில் அளவு.

தள்ளாட தள்ளாட
நிலையாய் நிற்கிறது
அரசின் வருவாய்.

போட்டியிட்டு உயர்கிறது
பீர் விற்பனை அளவும்
வெயில் அளவும்.

ஞாயிறு, 1 ஜூன், 2014

அடையாளம்


பொக்கை வாய் பார்த்து
பாட்டனே அச்சு அசல்
பாட்டி.

திருட்டு முழியப் பாத்தா
தெரியல அப்படியே அப்பன்
மனைவி.

இன்னும்
உற்றார் உறவினர்களுக்கு
அவரவர் நினைவில்
நிழலாடும் உருவங்கள்.

எதுவும் அறியாது
விளையாடும் குழந்தை

நாளை
யாரின் தாசனாய்
யாரின் பித்தனாய்
முடி வளர்த்து
மீசை மழித்து
யார் போல் இருப்பான்
சொல்.

சனி, 31 மே, 2014

பிடாரனின் பெரு வாழ்வு

செவி வழியாக வரும்
கதைகளில்
ஜீவக்கிறான் அவன்.

அவன் குறித்து
அறியா அவர்கள்
பரிகசிப்பின் ஊடே
முகம் மறைக்கும்
வீசிடும்
ஐம்பது காசுகள்.

மதிப்பற்றுப் போன
மதிப்பீட்டில்
மனம் உழலும்.

தோள் காய்ப்பு சொல்லும்
கூடை தொங்கும்
மூங்கில் சுமக்கும்
காலம்.

குடிகொள்ளும்
கூடைக்குள்
பிடாரன்.

மயங்க வாசிக்கும்
அவன்
மயக்கம் தெளியாது
தொடர…

உச்சி மீறும்
ஒருநாள்
விஷம்.

திசைவெளியெங்கும்
திரியும்
பிடாரன்கள்
வெறிகொண்டு
அலையும் படமெடுத்து.

பேசுவரோ
அப்போதேனும்
பிடாரனின்
பெரு வாழ்வு குறித்து.

மரம்

யாரேனும்
நல்ல கவிதை
கேட்டால் சொல்வேன்
மரம்.

நீண்டு வளர்ந்து
இருள் பரப்பி
நிற்கும்
மரம்போல்
நீள் கவிதை
வேறெது.

யாரால்
எழுத இயலும்
மரம் போல்
ஓர்
நல்ல கவிதை
இயற்கைத் தவிர.

வெள்ளி, 30 மே, 2014

சந்திப்பு வேண்டி...

எத்தனையோ தருணங்களில்
நாம்
எவையெவை குறித்தோ
தீவிரமாய்
நமக்குள்
சம்பாஷித்திருக்கிறோம்.

அடுத்தவர் பார்வையில்
மாபெரும் சர்ச்சையாய்
மிளிர
பேசியவை உண்டு.

விலக்க எண்ணி
விலகிப் போனோர்
ஏராளம்.

இன்னும்
கதைக்கிறோம்
கதைப்பினூடே
கூடும் சிக்கல்.

என்றாலும்
ஒவ்வொரு கதைப்பின்
பின்னும்
தொக்கி நிற்கிறது

ஓர் வார்த்தை
அடுத்த
நம் சந்திப்பு
வேண்டி.

பொய்கள் சூழ் வாழ்வு

எப்படியும்
சொல்ல நேரிடுகிறது
பொய்.

இங்கு
பொய்களே உண்மை
உண்மையோ பொய்.

பொய்களின்றி
வாழலாமென்றால்
பொய்களோ
காற்றைப்போல.

பொய்க்கால்
ஆட்டம் போல்
பொய்
முகத் தோற்றங்கள்.

விசுவாமித்திரர்களுக்கு
இல்லை
சிரமம்.

அரிச்சந்திரர்கள்தான்
நொடிக்கு நொடி
தோற்றுப்போகிறார்கள்.

எங்கும்
எல்லாரிடத்தும்
பொய்களின் ஆதிக்கம்.

பொய்யின்றி
இல்லை எதுவும்
என பொய்கள்.

ஆழ சூழ்
இவ்வுலகு
என்பதுபோலாகும்
பொய்கள்சூழ்
இம் மனிதம்.

பொய் சொல்லி
வாழ வாய்த்தது
இவ் வாழ்வு.

வியாழன், 29 மே, 2014

என்னடீ இது...

என்னடீ இது
கை கால் வேறாய்
கலைத்துப்போட்ட தூக்கம்

விடியலில் விழித்து
முடங்கும் வரை
வேலை பழகு...

முடங்கியபொழுதும்
சுயநினைவில்
இரு...இன்றேல்

சுற்றம்...முற்றும்...
ஊரு...உலகம்
எல்லாம் ஏசும்...

புள்ளைய வளர்த்திருக்கும்
லட்சணம் பாரு
உனக்கில்லை எதுவும்

உன்னை ஏன்
காரணம் வேண்டுதோ
மனசு...

நீ மட்டுமில்லேடீ
உன் போல் நானும்
பெண்.

பிள்ளைமுகம்

ஏதேனும் ஒன்று
வம்புக்கு இழுக்க
மூணாவதாய் பெறந்ததும்
பொட்டக்கட்டையா...
வம்சமே அப்படி...
பாவம் அவன்
என்ன வரம் வாங்கினானோ
அவனுக்கு இவளால
இப்படியாகுது...

இன்னும் எத்தனையோ
சொல்லில் அடங்கா
மாமியின் சீண்டல்
நாத்தியின் கிண்டல்
கணவனின் ஏச்சு
சுற்றம் சொல்லும் குற்றம்
கூட்டும் சுமை
கணக்கிடும் மனசு

எல்லாவற்றையும்
நொடிகளில்
மறக்கச் செய்யும்
பாலுண்டு
முலைக்கனமிறக்கி
சிரிக்கும்
அப்பழுக்கில்லா
பிள்ளை முகம்

புதன், 28 மே, 2014

பூனை மனம்

பிராணிகளில்
மிகவும் பிடித்த்து
பூனை.

பூனை குறித்து
இகழ்ச்சி கூறின்
தீப்பந்தம் ஏந்தும் மனசு.

அம்மா எப்போதும்
சொல்கிறாள்
சப்தமாய் சிரிக்காதே
அதிர்ந்து நடக்காதே
உரக்கப் பேசாதே
இன்னும் இன்னும் நிறைய

எப்படிச் சொல்ல
பூக்கட்டும் இலாவகத்தைவிட
எளிதானது
போருக்கு தலைமை ஏற்பதென

பூனை
ரொம்பவும் பிடிக்கும்
மென்மை கருதி மட்டுமன்று
அதனுளிருக்கும்

வன்மம் வேண்டியும்.

புரிதல்


எப்படி…எப்படி
புரிய வைக்க…
ஒவ்வொரு பொழுதும்
ஆச்சுதா…? இன்னுமா..? எனும்
புருஷனின் புத்திக்கு
குழந்தைக்கு பாலூட்டி
வீடு கூட்டி
எல்லாம் சரிசெய்து
தாழிட்டுக் கிளம்பும்
நான்…
பெண்ணென்று.

செவ்வாய், 27 மே, 2014

கஷ்டம்

காய் அரியும் வேளை
விரலும் சேர்ந்து அரிகையில்
தடித்து வரும்
கணவன் குரல்
பார்த்து செய்யக் கூடாது...

எதை.... எப்போ....?
கேட்க நினைத்தும்
வார்த்தை
விழுங்கும் மனசு.

எப்படிச் சொல்ல
ஒவ்வொரு
அரிதல் காயத்தின்
பின்னும் இருக்கிறது
கஷ்ட நினைவுகள்
வாய்த்தது தொடங்கி
வலிந்து
புணர்தல் வரை...

மௌனத்தின் நாவுகள்

இருக்கலாம்
வேர்களின்மரங்களின் பேச்சு வலி
குறித்து.

செடிகளும் கொடிகளும்
சல்லாபிக்குமோ?
தண்டும் தண்ணீரும்
பற்றி.

பூவுக்கும் வண்டுக்கும்
மொழி
சங்கீதமாய்
தொடர

பாழும்
மனிதர்களுக்கிடையே மட்டும்
நீளும்
மௌனத்தின் நாவுகள்

திங்கள், 26 மே, 2014

கட்சி தாவல்-சென்ரியூ

அதிகப் பசி
அதைவிட அதிகம்
உணவின் விலை.

கண்ணாமூச்சு ஆட்டம்
வெற்றி பெறுபவர்களுக்கு
மந்திரி நாற்காலி.

மாற்றம்
மனித தத்துவம்
கட்சி தாவல்.

புதன், 21 மே, 2014

மகா நடிகன்

பேசு
பேசிக்கொண்டிரு
உமது பேச்சு
மகத்துவம் மிக்கதாய்
இருக்கும்படி பேசு

முத்தமிடு
முத்தமிடுகையில்
உதடுகளில் எதுவும்
ஒட்டாதபடிக்கு
முத்தமிடு

கட்டித்தழுவு
தழுவும் போதே
தள்ளும் செயலும்
அரங்கேற்றம் காணட்டும்
அரங்கேற்றம் மட்டும்
கண்கள் அறியாவண்ணம்
கட்டித்தழுவு

கண்ணீர் விடு
ஆன்மா உருக
குரல் நடுங்க
பதறி துடிப்பதாய் 
நினைக்கும்படி
கண்ணீர் விடு

எல்லாம் என்னிடம்
இருந்தும் நீதான்
நானெனச் சொல்
உன்னைவிட உன்னைவிட
உலகத்தில் உசந்தது
பாட்டும் பாடு
நீயே நான் என்பதில்
அவனை அழி
நான் நீயென
பார்க்கப் பழக்கு

நடிகனாவாய்
இல்லை
நம்தேசத்தில்
ஆள்பவனாவாய்
மகாநடிகன்
மாமன்னன்.

பேசிக்கொண்டிரு...

ரசிக்கப் பேசு
மயக்கப் பேசு
மயங்கப் பேசு
உரக்கப் பேசு
பேச்சின் பொருள்
விளங்காதிருக்கும் வண்ணம்
பேசு பேசு பேசிக்கொண்டிரு.

கண்ணால் பேசு
உடலால் பேசு
மொழிகொண்டு பேசு
மௌனத்தில் பேசு
ஆயுதம் பேசும்
காலம் வரையில்
வார்த்தை ஜாலம்
அவசியத் தேவையாகும்
பேசு பேசு பேசிக்கொண்டிரு.


செவ்வாய், 20 மே, 2014

சிவப்பாய் ஒரு பூ

மரங்கள் இலைகள் உதிர்ந்து
இளம் தளிர்கள்
துளிர்க்க தொடங்கி விட்டது.

எல்லாரும்
பேசிக்கொள்கிறார்கள்
இனி
பூக்கும் காய்க்குமென்று.

ஊரார் பேச்சினை
கேட்கும்போதெல்லாம்
தூர தேசம் வந்துவிட்ட
என்னுள்
தோன்றி மறைகிறாள்
நகுமலர்
இனவெறி தாக்குதலில்
மாண்டுபோன
என் மகள்.

அவள் ஆசையாய்
வளர்த்த
மரத்தடியில்
நீருற்றும் வேளை
ரத்தம் ஊற்றி
மாண்டுபோனாள்.

என் வீட்டுவாசலில்
இந்நேரம்
இலைகள் உதிர்த்து
துளர்விட்டு
பூக்குமா

என்மகள்
ஆசையாய் வாசலில்
வளர்த்த
சங்குப்பூ மரம்
அவள் ரத்தம் குடித்த
நன்றிக்கு
சிவப்பாய் ஒரு
பூ

அரசியல் நாடகம் - சென்ரியூ

ராஜினாமா அறிக்கை
படித்து முடிக்கும் முன்
மீண்டும் பதவியேற்பு

அப்பா பிள்ளை
உறவு முடிவு
அரசியல்


செவ்வாய், 13 மே, 2014

சிநேகம்-ஹைக்கூ

தடுத்து விட்டது
வெள்ளை சட்டை
குழந்தையின் சிநேகம்.

உயிர்த்தெழுந்தார்
தேர்தல் தினத்தில்
இறந்து போன தாத்தா.

இடம் பொருள் ஏவல்
நானும் பிற்பட்டவன்தான்
பீகாரில் மோடி.

சொல் பார்க்கலாம்
இணையில்லா கவிதை
அம்மா.

சனி, 10 மே, 2014

புடவை-ஹைக்கூ

சிவப்பா அழகா
எத்தனை நாள் உழைக்கும்
மயில் பார்டர் புடவை.

அம்மாவின் புடவை
மாற்றம் கண்டது
அக்காவின் தாவணி.

காலமாற்றம்
தெரியவில்லை
கொசுவம் வச்சு புடவை கட்ட.


பெண்ணடிமை

என் அம்மாவுக்கு
தங்கச்சி பாப்பா பிறந்தநாளில்
எங்க வீட்டு
பசுவும் கன்று ஈன்றது

தங்கச்சி பிறந்ததாய்
அம்மாவை
பொட்டபுள்ளையா  பெத்துக்கிறா
திட்டிய பாட்டி

பொறந்த குழந்தை
பொண்ணா போச்சுன்னு
ஒருவாரம் பத்துநாள்
அம்மாவிடம்
பேசாத அப்பா

பசு
பொட்டை கன்னு
போட்டதுன்னு சொல்லி
குதூகலித்துப் போனார்கள்

தங்கைக்கு ஒரு பெயர்
வைத்தது போலவே
அதற்கும் ஒரு பெயர்
வைத்துக் கொண்டோம்.

எல்லாருக்கும்
கன்று வெறும் கன்றல்ல
செவில் நிறத்தில்
வெள்ளை புள்ளியோடு
மான்போல தோன்றிற்று

கொஞ்சநாள் போக
கன்றுக்கு
கழுத்தில் மணிகட்டி
கண்டு ரசித்தார்கள்
துள்ளும் போதெல்லாம்
எழும் சத்தம்
நல்ல சங்கீதம்
நாளெல்லாம்
சொல்லிக்கொண்டோம்.

தங்கைக்கும்
முடி வளர
குல சாமிக்கு பொங்கவச்சு
மொடடை போட்டு வெச்சோம்.

இன்னும் கொஞ்சம் நாள்
வேகமாய் உருண்டோட
கன்றுகுட்டிக்கு
அப்பா
மூக்கணாங்கயிறு
மூக்கில் ரத்தம் வர
குத்தி கட்டி விட்டார்.

ஆசை கன்று
ரணமாச்சி
என்றெண்ணி
ஏம்பா இதுபோல
என்று கேட்டதுமே

அப்பதான் கன்று
ஆடாது
ஆட்டம் போடாது
துள்ளாது
புடிச்சா புடியில்
கட்டு பட்டு நிக்குமின்னு
அடுக்கடுக்காய்
சொன்ன அப்பா

தங்கைக்கு
அழ அழ
ரத்தம் கசிய
காது மூக்கு
குத்திய காரணத்தை
இன்று வரை சொல்லவில்லை
பெண்ணடிமை
செய்கிறோம் என்று.

கவிதை-ஹைக்கூ

அவன் கவி இவன் கவி
எழுது
நீ கவி.

அதுஇது
மோசம் என்றெழுது
சிறக்கும் கவி.

என்ன யோசனை
பொறுக்கிப்போடு வார்த்தை
பிறக்கும் கவி.

எதுகைக்கு மோனை
எட்டா சொல்லிருந்தால்
ஆகும் புதுகவி.

புதன், 7 மே, 2014

2ஜி-ஹைக்கூ

காவு கொண்டது
செல்போன் டவர்
சிட்டுக்குருவி.

ஓயாத பேச்சு
செல்போனில்
வளரும் பிரச்னை.

நீதிமன்ற சாட்சி
உறவுக்கு
செல்போன் பேச்சு.

காந்திஜி நேருஜி
விடுதலை பெற
2ஜி 3ஜி சிறைசெல்ல.


செவ்வாய், 6 மே, 2014

மும்மாரி-ஹைக்கூ

நடந்தது
கல்யாணம்
மழை  வேண்டி கழுதைக்கு.

ராஜாகள் ஆணடால்
சொல்வார்கள் மந்திரிகள்
மாதம் மும்மாரி.

மழை இல்லை
தொலைகாட்சி தொடரில்
மெய் மறந்திருப்பரோ வருண பகவான்.

வருமோ கால்நடைபிழைக்க
மனிதர்கள் பொருட்டு
வாரா மழை.




மழை-ஹைக்கூ

மழை வேண்டுகிறான்
சம்சாரி
வழிந்தோடும் வியர்வை.


பெருமழை
சப்தம்
பெண்களின் பேச்சு.

கப்பல்விடும் குழந்தை
தெருவெள்ளத்தில்
கனவில்.

சொல்லக் கேள்வி
காணக்கிடைக்கவில்லை
மாதம் மும்மாரி.

வெள்ளி, 2 மே, 2014

கடல்-ஹைக்கூ

வில்லங்கம் ஏதுமில்லை
பத்திரத்தில்
பிரிந்தது சொந்தம்.

அள்ள அள்ள குறையவில்லை
கொடுக்கிறது
கடல்.

விரிவாய் எழுதிய
பத்திரத்தில் இல்லை
பெற்றெடுத்த வலி.

சொத்து மதிப்பு
சொன்ன பத்திரம்
மறந்தது தாய்பால் விலை.

புத்தனாக-ஹைக்கூ

மனம் முழுக்க ஆசை
புத்தனாக
தடுக்கும் ஆசை.

யானைதான்
தெரியவில்லை
மதம் பிடித்தது.

ரத்த அழுத்தம்
அளக்கும் கருவி
காட்டவில்லை இதயத்தை.

நல்ல வேடம்
கள்ள வேடம்
தெரியவில்லை முகமுடி.

வியாழன், 1 மே, 2014

நிழல்-ஹைக்கூ

வெட்டுக் குத்து
முடிந்தது
பத்திர பதிவு.

நடந்தது
பத்திர பதிவு
பிரிந்தது சொந்தம்.

மிதித்தும் அழவில்லை
உடன் வந்த
நிழல்.

ஒளிந்திருந்து கவனிக்கும்
இருளில்
நிழல்.


செவ்வாய், 29 ஏப்ரல், 2014

எனது ராஜ்ஜியத்தில்

உமது வசிப்பு
எனக்கான ராஜ்ஜியத்தில்
உமது வசிப்பு
எவ்வளவு
சுதந்திரமாகவும் இருக்கலாம்
எனக்கான ராஜ்ஜியத்தில்

உமது புலன்கள்
எமக்கான வற்றை மட்டுமே
கண்ணுறும் வரை
செயற்படுத்தும் வரை
மிகவும் சுதந்திரமானது
உமது வசிப்பு
எனது ராஜ்ஜியத்திற்குள்

உன் கண்களால்
என்னை மட்டும் பார்
உன் செவிகளால்
என் புகழை மட்டும் கேள்
என் குரல்கொண்டு
என் பெருமை மட்டும் பாடு-பேசு

உனது இருப்பு
மிகவும் மிகவும்
சுதந்திர மானதாய் இருக்கும்


உன் கண்கள் காண்பது
என் புறத்தை என்றால்
குருடாக்கப்படும்

செவிகள் கேட்பது
எமக்கெதிரானதெனில்
செவிடாக்கப்படும்

உமது குரல்
எம்மை எதிர்ப்பதெனில்
குரல் வளை
நசுக்கப்படுவாய்

எம்மை எதிர்த்தப்பயணம்
செய்தால்
முடக்கி வைக்கப்படுவாய்

வெளிச்ச ரேகைகள்
அற்ற
இருள் உலகில்
வாழ வேண்டி வரும்

உமது புலன்கள்
எமக்கான வற்றை மட்டுமே
கண்ணுறட்டும்
செயற்படுத்தட்டும்

அதுவே
உமக்கும் நல்லது
எமக்கும் நல்லது
மிகவும் சுதந்திரமானது
உமது வசிப்பு
எனது ராஜ்ஜியத்திற்குள்

எமக்காக மட்டும்
நீ வாழும் வரையில்
சுதந்திரமானது
உன் இருப்பு
எனது ராஜ்ஜியத்தில்.

 -மோ(ச)டி கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான ஷப்பனம் ஹாஸ்மி -க்கு இது




ஒரு வயசு

அது அதுக்கு
வேணும் ஒரு வயசு

துள்ளி குதிக்க
ஆர்பரிக்க
அமா்க்களம் செய்ய
ஓடி ஆட
ஒரு வயசு

படிக்க
பிடிக்க
நடிக்கத்தேவை
வேறொரு வயசு

காதல் செய்ய
கல்யாணம் பண்ண
கூடிக் களிக்க
குழந்தை கொஞ்ச
கொஞ்சம் கூட வேணும் வயசு

முன்பே கிடைக்கும் சிலருக்கு
கிடைத்தாலும்
என்னமா ஆட்டம்
ஏற்புடையதாகாது

வயசுக்கு முன்னோ
வயசுக்கு பின்னோ
நடப்பது ஏற்பன்று

காதல்
இருபதில் சொன்னால்
நகைப்பு
அறுபதில் சொன்னால்
வியப்பு.

இருந்தும் சொல்வர்
அது அதுக்கு வேணும்
ஒரு வயசு.

எண்ணம் தவிர

இது/அது
யாருடையது
என்னுடையது
இல்லை
என்னுடையதாய் இருக்கலாம்
இல்லை
அவருடையது
இல்லை
அவருடையதாய் இருக்கலாம்.

இல்லை இல்லை
என்னுடையதும்
அவருடையதுமாய்
இருக்கலாம்
இல்லை
அவருடையதும்
என்னுடை்யதுமாய்
இருக்கலாம்.

எதுவுமில்லை
யாருடையதுமில்லை
அவரவருடையதாய்
என்னும்
எண்ணம் தவிர.

திங்கள், 28 ஏப்ரல், 2014

ஹைக்கூ

உயிரோடு இருப்பதாய்
ஏமாறும் பறவைகள்
காவல் பொம்மை

அறுவடைக்குப்பின்னும்
கம்பீரம் குறையாமல்
காவல் பொம்மை.

காத்ததற்கு ஏதுமில்லை
கைவிரித்துக்காட்டும்
காவல் பொம்மை.

பயம் காட்டிச்சிரிக்கிறது
பறவைகளை
காவல் பொம்மை.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

ஹைக்கூ

ஜனநாயக ராஜாகள்
வாக்களிப்புக்குப் பின்
அகதிகள்.

கோடை தணிக்கும்
ஏழைகள்
கேழ்வரகு கூழ்.

பெற்றோரை பிரிக்க
குழந்தையை
கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

யானைகள் சுருங்க...

மன்னனை
மாலையிட்டு
தேர்வு செய்தும்
முன்னின்று படைசென்று
காவல் காத்ததும் யானை

கந்தனின் காதலை
கணேசனே உருவெடுத்து
சேர்த்து வைத்ததும் யானை

கோவில்கள் தோறும்
பக்தர்கட்கு ஆசிகூறி
வாழ்த்துகள் சொன்னதும் யானை

தன் நெற்றியில்
நாமமா பட்டையா?
மனிதர்கள் மோதிட பார்த்த யானை

வீதிகளில்
பாகன்களின் பசிபோக்க
பிச்சையெடுத்ததும் யானை

பலப்பலவாய்
பரிமளித்தயானை
ஊருக்குள் வந்திடுச்சி

பயிர் பச்சை காண
பட்டாசு வேட்டுகளில்
பாழ்படும் யானை

மனிதர்களின்றி
மிருகங்கள் வாழ்ந்த காலம்
மிருகங்களின் பொன்னுலகம்

மனிதர்கள் பெருக
மிருகங்கள் குறைய
மனிதரின் சுய உலகம்

யானைகள் சுருங்க
பாகன்கள் பெருக்கும்
காலம்.




செவ்வாய், 22 ஏப்ரல், 2014

வேட்பாளரின் வேண்டுகோள்...

அன்பின் வாக்காளர்களே
உங்கள் வேட்பாளன்
வேண்டுகோள்...

வாக்களியுங்கள்
வாக்களிப்பது உங்கள் கடமை
ஆட்சி செய்வது எனது லட்சியம்
வாக்களியுங்கள்.

உங்களின் தேவை
எல்லாம் அறிவேன்
வாக்களியுங்கள்...

குழந்தைகள் படிப்பு
படித்தோர்க்கு வேலை
கை நிறைய வருவாய்

குடிக்கத் தண்ணீர்
(உலகத் தேவை இது)
நல்ல மருத்துவம்
வாகனப் போக்குவரத்துக்கு
சிறந்த சாலை

சக்திக்கேற்ற வேலை
தேவைக்கேற்ற வசதி

இப்படி இப்படி
இன்னும் பல
எல்லாம் அறிவேன்

வாக்களியுங்கள்
தேவைகள் நிறைவேற்ற
வாக்களியுங்கள்

வாக்களிப்பது உங்கள் கடமை
ஆட்சி செய்வது எனது லட்சியம்

எல்லாத் தேவையும்
எல்லார் தேவையும்
எப்படி நிறைவேற்ற முடியும்
என்று எண்ணமா...

எல்லார் தேவையும்
இல்லை என்றாலும்
சிலரின் தேவைகள்
நிறைவேற்றுவேன்
வாக்களியுங்கள்

சிலரின் தேவையும்
முடியாது போனால்
எனதுகுடும்பத்தார் தேவை
அதுவுமில்லை என்றால்
எனது தேவை
நிறைவேற்றிக்கொள்வேன்
வாக்களியுங்கள்

வாக்களிப்பது
உங்கள் கடமை
ஆட்சி செய்வது
எனது லட்சியம்
வாக்களியுங்கள்....

திங்கள், 7 ஏப்ரல், 2014

வீட்டிற்குள்…



அரிதாய்
வீட்டிற்குள் இருக்கிறேன்
வீட்டிற்குள்ளிருக்கும்
எம்மிடம்

எப்பொழுதும்
வீட்டிற்குள்ளேயே
அடைப்பட்டிருக்கும்
எங்கள் நிலை
கொஞ்சமாச்சும் நினைப்பிங்களா?
ஆதங்கமாய் கேட்கும்
இல்லாளிடம்

உனக்கென்ன
எவ்வளவு பத்திரமாய்
சகலமும் அருகிருக்க
என்னைச்சொல்

அலைந்து திரிந்து
போதும் போதும் என்றாகிறது
சொல்லிக்கொண்டாலும்

வெறும் ஆளாய்
வீட்டிற்குள்

மனம் முழுதும் வெளியில் வலம் வர…

திங்கள், 24 பிப்ரவரி, 2014

மனசெங்கும் அலையும் கவிதைகள்-தோழர். கி.மூர்த்தி நூல் மதிப்புரை

மனசெங்கும் அலையும் கவிதைகள்

கவிஞன் தான் அனுபவித்த உணர்வுகளை சொற்களால் காட்சிப்படுத்தி கவிதையைப் படிக்கும் வாசகனையும் உணரச்செய்கிறான் என்பதே கவிதை குறித்த என் அபிப்பிராயமாகும். சமுகத்தின் இன்பம் மற்றும் பயன்பாட்டிற்காக வாழ்வில் தான் சந்தித்த உணர்வுகளை வாசகனுக்கு அறிமுகப்படுத்துவதை கவிஞர்கள் தங்கள் நோக்கமாக கொள்கின்றனர். இதன் அடிப்படையில் மகிழ்ச்சி, கோபம், துன்பம், ஏக்கம், போன்ற தனி மனித உணர்வுகள் கவிதைகளில் காட்சிப் படுத்தப்படுகின்றன. பயன்பாட்டில் இல்லாத சொற்களையும் மிதமிஞ்சிய அலங்கார வார்த்தைகளையும் வெறுமனே அடுக்கி பிரச்சாரம் மேற்கொள்ளும் கவிதைகளை விட யதார்த்தத்தில் எளிமையாக கிடைக்கும் நிகழ்வுகளையும் சொற்களையும் உடுத்திவரும் கவிதைகள் அதிக அளவில்  வாசகனைச் சென்றடைகின்றன. கலை கலைக்காகவே படைக்கப்பட்டாலும் அன்றாட அறிவியல் உண்மைகளுடன் நெருக்கமாக உறவாடினால் படைப்புகள் வாசகனால் மீண்டும் மீண்டும் பரிசீலிக்கப்படுகின்றன.

வேலைக்குப் போவதற்காக அன்று வழக்கம்போல காலையில்  சன்னலோர பயணக் கனவுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். திருவண்ணாமலை செல்லும் அரசுப்பேருந்தில், முகப்பு கண்ணாடிக்கு பின்புறத்தில் தோழர் க.ராமஜெயம் வழக்கம் போலவே உட்கார்ந்தபடி வந்தார். திரவியம் தேடும் ஓராண்டு கால தொடர் பயணத்தில், அபூர்வமாக அவருக்கு அருகில் உட்காரும் வாய்ப்புக் கிட்டியது.

வெற்றிகரமாக என்னுடைய முதலாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்துவிட்டதுஎன்ற புத்தாண்டு செய்தியைச் சொன்ன  தோழர் பிறிதொரு பொழுதில் என்று பெயரிடப்பட்ட அந்த கவிதைத் தொகுப்பை என் கையில் திணித்தார். அட்டைப்படம் அழகாக இருந்தது.

இலக்க்கிய ஆர்வலர், நண்பர், கவிதைகளின் காதலர் முதலிய காரணங்களைத் தாண்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு  நீந்தக் கிடைத்த கவிதைநதி என்பதால் உடனடியாக குதூகலத்துடன் நதியில் இறங்கிவிட்டேன். நவீனம் என்ற ஆரவாராம் ஏதுமின்றி எளிய மக்கள் மொழியில் நதி நகர்ந்து கொண்டிருந்தது.

காதல்வாழ்வில் எஞ்சிய இளம்பிராயத்து ஈரஞாபகங்கள்,  பெருமூச்சுகள், கோபங்கள், தினசரி கடந்து போகும் யதார்த்த நினைவுகள் என்பதான இன்னபிறவெல்லாம் என்னோடு நதியில் நீராடின. வெய்யிலைத் தவிர வேலூரில் எல்லாமே வறட்சி என்ற காரணத்தால் முக்கால் மணிநேரம் போவது தெரியாமல் ஒரே மூச்சாக நீந்திமுடித்து பெருமிதத்துடன் நிமிர்ந்தேன்.   

நீந்துகின்ற வாசகனின் முகம் பார்த்தபடி நதிக்கரையில் அமர்ந்திருந்த தோழர், கவிதைகள் குறித்த உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் தோழர்“ என்ற சொற்களை உதிர்த்துவிட்டு இறங்குமிடம் வந்ததால்  விடைபெற்று இறங்கிப் போனார்.

வாசிப்பை மறந்து போன மந்தையில் ஒருவனாகியுள்ள எனக்கு வேலை,பயணம், தூக்கமென்ற சராசரியான தினசரி நிகழ்வுகளுக்கு நடுவில் விமர்சனம் எழுத நேரம் எப்படி கிடைக்கும்? அடடா! பேருந்திலேயே தோழருடைய கைகளைப் பற்றி தொகுப்பு அருமைஎன்று விமர்சனத்தை எளிமையாக முடித்திருக்கலாமோ என்ற நினைப்பு வந்து போனது.  

பிறிதொரு பொழுதில் தொகுப்பை முன்னும் பின்னுமாக மீண்டும் ஒருமுறை திருப்பிப் பார்த்தேன். வாசித்து முடித்த கவிஞனின் மன உலகத்தில் உடனடியாக என் நினைவில் பளிச்சிடும் வரிகளை சுட்டிக்காட்டலாம் எனத் தோன்றியது.  

                           ''ஆள்தேடி
           முகம் பார்த்து
           தலை சொரிந்து
           பல் இளித்து
           வளைந்து நெளிந்து
           குழைந்தே காரியம் நடக்க
           அப்புறம் என்ன மயித்துக்கு
           சட்டம் சடங்கு

என்ற உண்மையின் பதிவு சட்டென கண் முன்னே வந்து நின்று கேள்வி  கேட்டது.

நிலங்கள் வெவ்வேறு என்றாலும் வானம் பொதுதானே!  சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களும் கேட்க நினைத்து மறந்த கேள்வியை கவிஞர் கேட்டிருக்கிறார்..  விடை கிடைக்குமா கிடைக்காதா என்ற வாசகனின் தேடலில் தம்மளவிலாவது உண்மையானவனாக இருக்க வேண்டுமென்ற சிந்தனையை இக்கேள்வி அவனுக்குள் விதைத்து விடுகிறது என்பதை மறுக்க இயலாது.

இளம்பிராயத்து காதலியை ஒரு மழை நாளில் சந்திக்க் நேர்ந்து , அழுகாச்சி முகத்தை துடைத்துக் கொண்டு, அவ்வப்போது வெறுமனே அசை போட்டுக் கொண்டிருக்கும் என்னைப் போல எத்தனையோ நண்பர்களைச் சந்தித்திருக்கிறேன்.

மழை நனைத்த முகத்தை
துடைத்துக் கொண்டோம்
கண்ணீரையும் சேர்த்து


என்று எழுதி இவர் நினைவூட்டுகிறார். மீண்டு வரும் காதலியின் முகம் உடலையும் மனசையும் சிலிர்க்க வைக்கிறது. இதுதானே கவிதை தரும் யதார்த்தம்!.

அதே மழைதினத்தில் காதலியிடம் மேற்கொண்ட  உரையாடலின் சுருக்கம் கவிஞரின் கவிதைத் தொகுப்பிற்கு தலைப்பாகியும் உள்ளது.

      சந்திப்புகளின் உச்சத்தில்
      ஒருவருக்கொருவர்
      என்றானோம்
      நீ
      ஒருவருக்கு
      நான்
      ஒருவருக்கு
      என்றான பிறிதான பொழுதில்
      சந்தித்துக் கொண்டோம்
      ஒன்றுமில்லாமல்...

கழுத்தை நெறிக்கும் இம்முடிச்சுடன்தான் நமது காலை விடிகிறது என்பதை நாம் மறுக்க முடியுமா? நெகிழ்ச்சியளிக்கும் காதலை ஆழ்மனதில் புதைத்துக் கொண்டு மகிழ்ச்சியளிக்கும் மனைவியிடம்,

             எப்படி சொல்ல
             அவளிடம்
             உன்னை காலங் காலமாய்
             சமையலறையிலேயே
             வைத்திருக்கிறேன்
என்றுஆதங்கப்படும் கவிஞரின் மனதில் நீதிமிக்க மனித சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது.


               எல்லாம் கேடு
               என்ற போதும்
               அரசாங்கம் விற்றால்
               நல்ல சரக்கு
               அடுத்தவன் விற்றால்
               கள்ளச் சரக்கு

என்ற சுட்டிக்காட்டலில் உளியைப் பிடிக்கின்ற கை தெரிகிறது.

                                        ”யாருக்காகவும் இல்லை
                என்றாலும்
                நட்டுவை தோட்டத்தில்
                பூச்செடிகள்
                வந்து போகும்
                வண்ணத்துப் பூச்சிகள் 
என்று இவர் எழுதியிருக்கும் வரிகளில் இயற்கை அளிக்கும் புலன் இன்பம் இலவசமாக கிடைக்கிறது.

பேருந்தை விட்டு இறங்க வேண்டிய கட்டாயம் வந்தபோதும் தொகுப்பிலுள்ள கவிதைகள் ஒன்றன் பின் ஒன்றாக என் நினைவுப் பரப்பில் அரும்பிய வண்ணமிருக்கின்றன.
அந்நியப்படாத் எளிய மொழியுடன் வாசகனின் மனதெங்கும் அலைந்து திரியும் கவிதைகளை தொகுப்பு முழுவதும் க.ராம்ஜெயம் படைத்துள்ளார் என்பதை அவரிடம் அடுத்த சந்திப்பின்போது சொல்லிவிட வேண்டும்.


திங்கள், 3 பிப்ரவரி, 2014

பலநிற பட்டாம்பூச்சி
மௌனமாய் கற்றுத்தரும்
ஒற்றுமையின் அழகு.


யாரை வரவேற்று
அணிவகுப்பு நடக்கிறது
எறும்புகளின் ஊர்வலம்.

நெரிசல்மிகு பயணம்
மனசு வலிக்கும்
முன்தலை மறைக்கும் தொலைக்காட்சி.

சனி, 18 ஜனவரி, 2014

ஹைக்கூ

கால் வலிக்கப்பயணம்
வலி நிவாரணியாய்
பேருந்து தொலைக்காட்சி.

மணல் லாரியில்
சிந்தும் தண்ணீர்
ஆற்றின் கண்ணீர்.

கதிரவன் கண்டு
நாணம் கொண்டது
செவ்வானம்.

பூ அழகு
பாட்டும் இனிமை
மயங்கிய வண்டு.

பழங்கதை ஆனது
ஆற்றில் வெள்ளம்
மணற் கொள்ளை.

மயக்கப் பாடி
மயக்கம் கொண்டது
தேன் உண்ட வண்டு.


வெள்ளி, 17 ஜனவரி, 2014

ஆர்பரிக்கும் குழந்தை

அழுது ஆர்பாட்டம் செய்யும்
குழந்தைகளை
எப்படியாவது அடக்கிவிட
ஏதேனும் ஒன்று நாடுகிறார்கள்

பெரும்பான்மை அம்மாக்களின்
ஆயுதமாகும்
பூச்சிக்காரன்
கொஞ்சம் பேருக்கு
பூனையாய் இருக்கலாம்
இன்னும் சிலருக்கு
நாய்களின் உதவி


பூனையையும் நாயையையும்
துணை கொள்பவர்கள்
தாங்களே அவைகளாய்
குரல் எழுப்பி
அதுவாகிறார்கள்

இவையில்லாமல்
வெகுசிலருக்கு யானை
வேறு சிலரோ
குரங்கினைக் காட்டுகிறார்கள்

பேருந்து பயணத்தில்
ஆர்பாட்டப் பிள்ளைகட்கு
இதோபார் அந்த
சொல்லி முடிக்குமுன்பே
முண்டியடித்து
கண்கள் உருட்டி
மீசை முறுக்கி
நாக்குகடித்து
கர்ஜிக்கிறார்கள்
தங்கள் குழந்தைகளிடம்
தோற்றுப்போனதை மறந்த
மாமாகள் பலர்.

ஏதேதோ செய்கிறார்கள்
கடைசியில்
ஆர்பரித்த குழந்தை
தானாய் அடங்குகிறது
அவர்களின் எதுவும்
பிடிக்காது...

சனி, 11 ஜனவரி, 2014

எமது கவிதை தொகுப்பிற்கு முல்லைவாசன் ஆய்வுரை

எளியவர்களின் பக்கம் ராமஜெயம்
(பிறிதொரு பொழுதில்-இராமஜெயம் கவிதை தொகுப்பிற்கான முகவுரையாக ஆய்வுரை ) 
கலை நம்மை காணவும் உணரவும் வைக்கிறது. அறிவியல், கருத்தாக்கங்கள் ‘அறிய’ வைக்கிறது. கலை உணர்வு நிலை. அறிவியல் கறாரான அறிவுநிலை. கலையானது முன் விவாதமற்ற முடிவை நாம் காண வைக்கிறது. அறிவியல் என்பது முடிவை நாம் அடையும் விவாதங்களையும், வழிமுறையையும் நமக்குத் தருகிறது. கலைக்கும் – அறிவியலுக்கும் உள்ள நிலை இது. ‘உணர்வினில் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்’ என்பார் பவணந்தி முனிவர்.
புறநிலை யதார்த்தமே கலையின் ஊற்று. யதார்த்தமே அழகு, எனில் கலை படைப்பு அழகானதாக நமக்கு வெளியில் உள்ளதை பிரதிபலிக்க வேண்டும். உலகியலை சொல்வது புறம். வாழ்வியலை சொல்வது அகம் என்பதும் பண்டைய மரபு. யதார்த்தமெனில் அகமும் புறமும் சேர்ந்ததே. பிரதிபலிப்பது என்பது எதை பிரதிபலிப்பது? கண்ணாடி பிரதிபலிக்கும் தன்மையுடையது. காற்றை பிரதிபலிக்குமா? காற்றைப்போல் ஊடுருவிய காலத்தை பிரதிபலிக்கும் படைப்புகள் நமக்குத் தேவை.

போராடும் போதுதான் மனிதன் பிறக்கிறான் என்பார் கார்க்கி. மனிதன் இயற்கையின் எஜமானன்என்பார் ஏங்கெல்ஸ். “அன்பு செலுத்துவதையே சாத்தியமற்ற ஒன்றாக ஆக்கிய ஒடுக்குமுறையை, முடிவுக்குக் கொண்டு வருவதே உண்மையான அன்பை நிலை நாட்டும் வழியாகும்” என்பார் பிரேசில் கல்வியாளர் பாலோ ஃபிரையிரே.
உண்மையான அன்பை, மனித நேயத்தை தனது கலைப்படைப்பில் தூக்கிப் பிடிக்கும் ராமஜெயம் நாடகவியலாளர். வீதி நாடகக் கலைஞர். உடல் மொழியால் பேசுபவர். இப்போது எழுத்து மொழியில் பேசுகிறார். ஒன்றுபட்ட வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட ‘தமுஎச’வோடு நீண்ட நெடிய தொடர்பால் அடையாளப்படும் ராமஜெயம் சில வரவுகளையும் வைத்துள்ளார். வைகறை கோவிந்தன், சுகந்தன் இருவரையும் ‘தமுஎச’வில் பாட வைத்தவர். கனிந்த மனதோடும், கருணை குரலோடும் வலம் வரும் ராமஜெயத்தின் கவிதைகள் முதன் முதலாக தொகுப்பாகி உள்ளது.
கல்லோ சிலையோ
காண்பது எதுவென்றாலும்
கால் தூக்கும் நாய்கள்.
நாய்கள் கவிதையின் தொனி பட்டுத் தெறிக்கும் திசைகள் நம் எல்லாருக்கும் சொந்தமே.
ஆள்தேடி
முகம் பார்த்து
தலை சொரிந்து
 பல் இளித்து
வளைந்து நெளிந்து
குழைந்தே காரியம் நடக்க
அப்புறம் என்ன மயித்துக்கு
சட்டம் சடங்கு
“அதிகாரம் எப்போதும் ஊழல் செய்யும் வரம்பற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழல் செய்யும்“ நேருவின் இப் பொன்மொழியை மனம் அசை போடுகிறது.
விடியற்காலை நடைபயிற்சியை
விடாது தொடர்கிறார்
இருத்தலே நமது வாழ்வு. வாழ்வினை நகர்த்தத்தான் எத்தனை பாடு.
அம்மா குழந்தை’ – அற்புதமான கவிதை
மனைவி கவிதை’ – பெண்ணின் உலகை சுருக்கி அடுப்பறையில் மாட்டி இருக்கும் ஆணாதிக்கத்தை தோல் உரிக்கிறார்.
ஆன்டனா வழியே
எல்லாம் வருதாம்
ஊர் ஊருக்கு இதே பேச்சு
அப்படின்னா
கொஞ்சம் அரிசி பருப்பு
புளி மிளகாய்
எண்ணெய் தண்ணி உப்பு கூட வருமா?
சாமான்ய மக்களின் வாழ்வை ‘ஆன்டனாவில்’  பதிவு
 செய்கிறார். எளியவர்களின் பக்கம் தன்னை நிறுத்திக்கொள்ளும் ராமஜெயம் எளியவர்களை உயர்த்தும், மேடு பள்ளங்களை தகர்க்கும் கடப் பாறையாய் தனது எழுதுகோலை தொடர…
அன்பான தோழமையும், வாழ்த்தும்.

தோழமையுடன்
முல்லைவாசன்
44. ஜி.எஸ்.மடம் தெரு,
பிச்சனூர். குடியாத்தம்.
வேலூர் மாவட்டம்.
கைபேசி: 9486390973