திங்கள், 31 அக்டோபர், 2016

அமோகம்

விளம்பரம் ஏதும் இல்லை
அமோகமாய் நடக்குது விற்பனை
டாஸ்மாக் கடை சரக்கு.

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

பிள்ளை முகம்

ஏதேனும் ஒன்று
வம்புக்கு இழுக்க
மூணாவதாய் பெறந்ததும்
பொட்டக்கட்டையா...
வம்சமே அப்படி...
பாவம் அவன்
என்ன வரம் வாங்கினானோ
அவனுக்கு இவளால
இப்படியாகுது...
இன்னும் எத்தனையோ
சொல்லில் அடங்கா
மாமியின் சீண்டல்
நாத்தியின் கிண்டல்
கணவனின் ஏச்சு
சுற்றம் சொல்லும் குற்றம்
கூட்டும் சுமை
கணக்கிடும் மனசு
எல்லாவற்றையும்
நொடிகளில்
மறக்கச் செய்யும்
பாலுண்டு
முலைக்கனமிறக்கி
சிரிக்கும்
அப்பழுக்கில்லா


பிள்ளை முகம்

வெள்ளி, 14 அக்டோபர், 2016

என்னைப்பற்றி

யார் யாரோ அறிந்திருக்கிறார்கள்
என்னைப் பற்றியும்
எனக்கானவை பற்றியும்.

நடை உடை
மூக்கு முழி
இப்படி சிலர்.

பழக்க வழக்கம்
பேச்சு உணவு
இப்படி சிலர்.

நல்லவன் கெட்டவன்
இல்லை ஏமாளி
இப்படி சிலர்.

இன்னும் சில
சொல்ல முடிந்த
சொல்ல முடியாதபடி...

அறிந்திருக்கிறார்கள்
என்னையும்
எனக்கானவையையும்

எனக்குத்தான்
தெரியவில்லை சரியாய்
என்னைப்பற்றி.

உடுத்த

கிடைக்குது எல்லா வசதியும்
வெள்ளையும் சொள்ளையுமா உடுத்த
கட்சிக் காரர்களுக்கு எப்பவும்.




















புதன், 12 அக்டோபர், 2016

கதைப்பு....

நெடுநாளைக்குப்பின்
நிகழ்ந்தது இச்சந்திப்பு
இருவருக்குமிடையில்
பரிமாற்றமானது
சூடான விவாதங்கள்.

அன்றாட நடப்புகள்
கதைப்பில்
அதிகம் இடம்பிடித்தது.

காவிரி கலவரம்
மேலாண் வாரியம்
முதல்வரின் உடல்நிலை என
நடப்புகளை பேசி முடிக்கையில்

கொஞ்சம்
இலக்கியமும் இடைப்பட்டது
தி.ஜா படிச்சிருப்பே
மோக முள் போல்
இன்னைக்கு சொல்லமுடியலே
என்றவரிடம்
என்னை ஈர்த்த
மரப்பசுவும் அம்மா வந்தாளும்
இடம் பிடித்தது.

தி.ஜா வை தம் சிறுகதைக்குள்
பெண்மன ஓட்டத்தை சொல்வதில்
மிஞ்சிவிட்டார்
கு.பா.ரா-என்றதும்
எல்லாம் அவரது
ராங்கி நெனப்பு
கவிதைக்கு பின்னாடி என்றார்.

பெண்கள் எழுத்து
என திசைமாறியபோது
என்னமாய் சொல்லிவிட்டார்
மனிதர் கந்தர்வன்
“ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கில்லை”-என்று.

இப்பவும் கவிதைங்க
பிச்சமூர்த்தியின்
காட்டுவாத்துகள்
ஆத்துமணலில் நடந்த
காலடித்தடம் போல
ஒன்னும் புரிய....

இன்றைக்கும்
எத்தனையோ வருது
யாருக்கு சொல்லை
காய்ச்சி வடிக்க வருது
கவிதை என்றார்.

அத்தனையும்
ஒன்றுவிடாமல்
எங்களுக்கிடையே ஆனவைகளைக்
கேட்டு கொதிப்படங்கிக்
கொண்டிருந்தது
இருக்குமிடையில்
மேசை மீதிருந்த
தேநீர் கோப்பைகள் ரெண்டும்.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

மனப் பறவை

பறவைகளுடனான உலகம்
அலாதியானது
விந்தை நிறைந்தது.

பறவைகளின் மொழிதலில்
ஆயிரமாயிரம்
பொருள்கள்.

ஒவ்வொரு சிறகசைப்பிலும்
விரிந்து கொள்ளும்
ஓர் புதிய உலகம்.

“க்விச்” ஒலி எழுப்பி
 செல்கையில்
 சிறகு கட்டிக் கொள்ளும்.

வனாந்தர வெளிகளில்
அலைந்து திரிந்து
கூடு திரும்பும்
மனப் பறவை
நாளும்.

கிளி

ஜோதிடக்காரன் கிளி
எடுக்கும் சீட்டுகளில் இல்லை
அதற்கான விடுதலை சேதி.

சனி, 1 அக்டோபர், 2016

பெயர்

பெயர்
இல்லாமல் இருக்கலாம்
இல்லாத வரையில்
எதுவுமில்லை

ராமன் என்றால் இந்து
ரஹீம் என்றால் முஸ்லீம்
ராபர்ட் என்றால் கிருத்து

வெறும்
மனிதன் என்பதற்கு
என்ன
பெயர்.

வரம்

யார் அறிவார் வாங்கிய வரம்
பெயர் எடுக்கும் பிள்ளை
பெயர் கெடுக்கும் பிள்ளை.

அடகு

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு
அடகு வைத்து திரும்புகிறது
மார்வாடி கடையில்.

எடுப்பாய்

அளவாய்
தேர்ந்தெடுத்தார் போல
எடுப்பாய்
எல்லாம் இருக்கு
உனக்கு
இதுபோல்
இப்படி சொல்ல
எதுவும் இல்லை
எனக்கு.

(*விக்கிரமாதித்தன்-அவர்களுக்கு)

ஆசை

கூழுக்கும் ஆசை
மீசைக்கும் ஆசை
இரண்டும் உள்ள வீட்டில்.

ஆத்தோட

வண்ணாத்தி மூத்திரம் ஆத்தோட
அதையும் அள்ளினான்
மணல் கொள்ளையன்.

அலை

ஓடி வரும் அலை
உடன் திரும்பும் கடலுக்குள்
கரையை பத்திரமாய் இருக்கச்சொல்லி.

அலை

ஓடி வரும் அலை
உடன் திரும்பும் கடலுக்குள்
கரையை பத்திரமாய் இருக்கச்சொல்லி.

கரை

கழுவ முடியவில்லை
ஆற்று நீரால்
மணல் கொள்ளை கரை.

வெறி

காத்துக் கிடக்கிறார்கள் வெறியர்கள்
சாதி மறுப்பு திருமணத்திற்கு
ஆணவக் கொலைகள் செய்ய.

பசி

பசி வந்திடின் பறக்கும்
பத்தென்ன பதின்னொன்றும்
பஸ்ஸீம் பற்றி எரியும்.

நாமம்

சின்னதாய் கேட்டான் அவன்
பெரிதாய் போட்டான் இவன்
நாமம் நெற்றியில்.

மனம்

வெளியில் கைகுலுக்கிக்கொள்கிறார்கள்
மனதில் நடக்கிறது
ஆடு-புலி ஆட்டம்.

பழக்கம்

மெல்ல நகரும் பூனை
பழகிக் கொண்டது அதன்
பின்னால் நகர எலி.

விலை-2

பதார்த்தக் கடையில் அவள்
பால்வீதியில் அவன்
ஆளாளுக்கொரு விலை பட்டியல்.

விலை

அறியும் இப்போது
பொதி சுமக்கும் கழுதைகள்
எது என்ன விலை என்று.

காந்தி ஜெயந்தி

மது கோப்பைகளிரண்டும் பேசின
உன் அதரம் என் அதரம்
எது அதிகம் உளறும்.

வலை பின்னல்

எட்டுது  ஒட்டுது கட்டுதுகலை
விடாமுயற்சியை சொல்லி
பின்னிடும் சிலந்தி வலை.

அனுபவ சேகரிப்பு

நேற்றைய தினம்
எதிர்பாராமல் நிகழ்ந்தது
நெடுநாளைக்குப்பிறகு
எங்களுக்கான
சந்திப்பு.

சந்திப்பின் ஊடாய்
விரிவடைந்து சென்றது
ஆல விருட்சமாய்
பால்ய நினைவுகள்.

ஐந்தாம்வகுப்பில் இருந்தபோது
ஊர் கம்மாய்
நிறைந்தோட
அம்மாணமாய் குளித்தகாட்சி
அவள் பார்த்துவிட்டாளென
வகுப்பறையில்
நாளெல்லாம்
சொல்லிச்சிரிச்ச
ரெஜினாவையும்
விட்டுவைக்கவில்லை
எங்களின் பேச்சு...

தினம்வீட்டுப்பாடம்
செய்த அவனுக்கும்
ஒரு பிலேட்டும் -சிலேட்டுமாய்
இருந்த எனக்குமான வாழ்க்கை
மாறாட்டம்

இன்னும் அவன்
ஒரு நிரந்தர
வேலைக்கு அல்லாடுவதும்
என்னையும் சொல்லி
மனபாரம் ஆறியது.

மீண்டும்
ஒரு இடைவெளியில்
சந்திக்கும் வரை
சேகரிக்க வேண்டும்
பரிமாறிக்கொள்ள
விதவிதமான
அனுபவங்களை...

வழிந்தோடும்...

அறையை சுருள்சுருளாய்
சுற்றி அலைகிறது
வெண்புகை.

உபயம் செய்தது
அலைந்து திரிய
மின் விசிறி.

நிறைமாதமாய்
மாற்றிக்கொண்டது
ஆஸ்ட்ரே.

புகைவெளியெங்கும்
அலைகிறார்கள்
வீடெங்கும்
தேவதைகள்
புன்னகை புரிந்தபடி.

அவர்களின் அசைவை
ரசித்துக்கொண்டிருக்கிறோம்
இருக்கையில்
அமர்ந்தநிலையில்
நானும்
மேசையில் இருக்கும்
மது குப்பியும்.

எங்களுக்குள்
இன்னதென்று
சொல்லிக்கொள்ள முடியா
ஆனந்தம்
வழிந்தோடுகிறது
இரவெல்லாம்
தினம்தினம்.


கனவில்...

யானைகள் எல்லாம்
பூனைக்கு சேவகம் புரிகின்றன
காக்கைகள் ஜதி சொல்கிறது
குயில்களுக்கு.

கழுதைகள் ஒன்றுகூடி
ஒருமனதாய் தீர்மானம்
இயற்றிக்கொண்டன
தாங்களே
உலகின் இன்னிசைக்காவலர்கள்.

பூக்களுக்கு இருந்துவந்த
மதிப்பும் மரியாதையும்
இடமாற்றம் கண்டது
இனி எங்கும் முட்கள்.

காலம் மாறிவிட்டது
பகலில் துயில்கொண்டு
இரவில் உலா
எல்லாம் நேற்றைய கனவில்...


பொய்-உண்மை

கவனமாய் கேளுங்கள்
பொதுவான கவனிப்பு
போதாது என்றே கொள்ளுங்கள்
பின் வருந்த நேரிடலாம்
சற்றே கூடுதல் கவனம்

என்சொல்
எல்லாம் பொய்
பொய் என்றால்
பொய்மட்டுமில்லை
உண்மையும் கூட

அதற்காக
எல்லாம் உண்மை
என்று எண்ணிவிடாதீர்
கொஞ்சம் பொய்யும்கூட.

முழுதும் பொய்யோ
முழுதும் மெய்யோ
யாரிடமிருக்கிறது
யாரையும்யாரிடமும்
வெறும் உண்மையென்றும்
வெறும் பொய்யென்றும்
இருக்க விடுவதில்லை

எப்படியும்
கலந்துவிடுகிறது
உண்மைக்குள் ஒரு பொய்யும்
பொய்க்குள் ஒரு உண்மையும்

தேடிக் கண்டேன்
உண்மையை என்பதும்
உண்மையுமல்ல
தேடாது விட்டேன்
என்பது
பொய்யுமல்ல.

உண்மையும் பொய்யுமாய்
தான் நகருகிறது
பொழுதுகள்
இங்கிருக்கும் எல்லாருக்கும்.


இலைமறை காய்போல்
பொய்மறை உண்மை

அடையாளம்

ஒன்றாகவே இருக்க வேண்டும்
என்றில்லை
ஒன்றாக இல்லாமல் இருப்பதே
கண்டறிய உதவுகிறது.
அடையாளம்.

குரலில் காணலாம் சிலரை
உருவத்தில் அறியலாம் வேறுசிலரை
பழக்க வழக்கங்களும்
காட்டிக்கொடுக்கும் சிலரை

மூக்குப்பொடி அண்ணாவிற்கு-அடுக்கி
முழங்குவது கலைஞருக்கு-வார்த்தை
முழுங்குவது நாவலருக்கு-இவை
முழுதும் சொல்லுவது கவிஞருக்கு.

சாய்வு நாற்காலி என்றால்
சிலருக்கு சில ஞாபகம்
சாம்பாரும் சட்டினியும்கூட
சாயலறிய உதவுகிறது.

பாதரட்சையும்
பயனானது
பாரதமும் இராமாயணமும்
அறிந்துகொள்ள.

வெவ்வேறான அடையாளங்கள்
தீர்மானம் ஆகிறது
எனக்கெது
அறிந்தவர் யார்?
சொல்வீர்
அடையாளம்...