சனி, 10 மே, 2014

பெண்ணடிமை

என் அம்மாவுக்கு
தங்கச்சி பாப்பா பிறந்தநாளில்
எங்க வீட்டு
பசுவும் கன்று ஈன்றது

தங்கச்சி பிறந்ததாய்
அம்மாவை
பொட்டபுள்ளையா  பெத்துக்கிறா
திட்டிய பாட்டி

பொறந்த குழந்தை
பொண்ணா போச்சுன்னு
ஒருவாரம் பத்துநாள்
அம்மாவிடம்
பேசாத அப்பா

பசு
பொட்டை கன்னு
போட்டதுன்னு சொல்லி
குதூகலித்துப் போனார்கள்

தங்கைக்கு ஒரு பெயர்
வைத்தது போலவே
அதற்கும் ஒரு பெயர்
வைத்துக் கொண்டோம்.

எல்லாருக்கும்
கன்று வெறும் கன்றல்ல
செவில் நிறத்தில்
வெள்ளை புள்ளியோடு
மான்போல தோன்றிற்று

கொஞ்சநாள் போக
கன்றுக்கு
கழுத்தில் மணிகட்டி
கண்டு ரசித்தார்கள்
துள்ளும் போதெல்லாம்
எழும் சத்தம்
நல்ல சங்கீதம்
நாளெல்லாம்
சொல்லிக்கொண்டோம்.

தங்கைக்கும்
முடி வளர
குல சாமிக்கு பொங்கவச்சு
மொடடை போட்டு வெச்சோம்.

இன்னும் கொஞ்சம் நாள்
வேகமாய் உருண்டோட
கன்றுகுட்டிக்கு
அப்பா
மூக்கணாங்கயிறு
மூக்கில் ரத்தம் வர
குத்தி கட்டி விட்டார்.

ஆசை கன்று
ரணமாச்சி
என்றெண்ணி
ஏம்பா இதுபோல
என்று கேட்டதுமே

அப்பதான் கன்று
ஆடாது
ஆட்டம் போடாது
துள்ளாது
புடிச்சா புடியில்
கட்டு பட்டு நிக்குமின்னு
அடுக்கடுக்காய்
சொன்ன அப்பா

தங்கைக்கு
அழ அழ
ரத்தம் கசிய
காது மூக்கு
குத்திய காரணத்தை
இன்று வரை சொல்லவில்லை
பெண்ணடிமை
செய்கிறோம் என்று.

கருத்துகள் இல்லை: